ஜனநாயக நாடொன்றில் நாடாளுமன்றத்துக்கு இடம்பெறும் சம்பவங்கள் குறித்து, இளம் சமுதாயத்தினர் தற்போது கொண்டிருக்கும் எண்ணங்கள் மற்றும் கருத்துகள், இந்த முறைமையை நிராகரிக்கும் வகையிலேயே உள்ளதென்றும் இதனால், எதிர்காலம் குறித்து நாம் தீர்க்கமாக சிந்திக்க வேண்டுமென, ஜனாதிபதியால்,

உயர்க்கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் இன்று முற்பகல் ஆற்றிய உரையில் தெரிவித்தார். மஹிந்த தரப்பு எம்.பிக்கள், இன்றைய சபை அமர்வைப் புறக்கணித்துள்ள நிலையில், விஜேதாச ராஜபக்ஷ மாத்திரம் இன்று அமர்வில் கலந்துகொண்டு, மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், பெரும்பான்மை உள்ள குழுவொன்றுக்கு, சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில், இதற்கான எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தான் தயாரென்றும் கூறினார்.

அத்துடன், இந்தப் பிரச்சினையை, சபாநாயகரால் மாத்திரமே முடிவுக்குக் கொண்டுவர முடியுமென்றும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, ஜனாதிபதியும் பாரிய அர்ப்பணிப்பை நல்கினார் என்றும் 62 இலட்சம் மக்கள் அவருக்கு வழங்கிய நம்பிக்கையை வைத்துக்கொண்டு, அரசமைப்பைப் பின்பற்ற அவர் நடவடிக்கை எடுப்பார் என்றும், இது தொடர்பில், ஜனாதிபதியும் சபாநாயகரும், ஒன்றாக அமர்ந்து பேச வேண்டுமென்றும் கூறினார்.