assaSave the Children அமைப்பு, Concern worldwide மற்றும் Action Against Hunger இணைந்து நடத்திய புதிய ஆய்வு ஒன்றில், சோமாலியாவில் 20,000 இற்கும் அதிகமான குழந்தைகள் பட்டினியால் இறக்கும் அபாயத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. சோமாலியாவின் ஒன்பது மாவட்டங்களில், கடுமையான பஞ்சத்தின் காரணமாக மக்கள் இறக்கும் அபாயத்தில் இருப்பதாகவும், சர்வதேச நாடுகள் உயிர் காக்கும் உதவிகளை சோமாலியாவிற்கு வழங்குமாறும் Save the Children அமைப்பு கோரியுள்ளது. Save the Children அமைப்பின் சோமாலிய நாட்டின் இயக்குனரான ஹசன் நூர் சாதி இது குறித்து கூறும்போது, “உணவுப் பஞ்சமும், ஊட்டச்சத்தற்ற குழந்தைகளின் நிலையும் பெரும் கவலையளிக்கிறது. சர்வதேச சமூகம் சோமாலியாவிற்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்க வேண்டும். இல்லையென்றால் 2011 இல் 2,50,000 மக்களை இழந்ததைப்போலவே, இம்முறையும் நிகழும் அபாயம் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.