uyiuiமட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கெட்டாஞ்சேனை பகுதியில் இருந்து மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முறக்கெட்டாஞ்சேனை பிரதான வீதியை அண்மித்த மக்கள் குடியிருப்பு மற்றும் பாடசாலை என்பவற்றை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும் முறக்கெட்டாஞ்சேனை இராணுவ முகாமின் சில பகுதிகள் மக்கள் தேவைக்காக கடந்த 2014ம் ஆண்டு இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டிருந்தன. சுமார் 78 குடும்பங்களுக்கு சொந்தமான இடங்கள் விடுவிக்கப்பட்டு அதற்கான வீட்டுத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. குறித்த வீட்டுத் திட்டத்தில் அமைந்துள்ள திருமதி வானதி உதயகுமார்(50) என்பவரின் காணியில் மலசலகூடம் அமைப்பதற்கு வெட்டப்பட்ட குழியில் இருந்தே குறித்த எலும்புத் துகள்கள் மீட்கப்பட்டுள்ளன.

வெட்டப்பட்ட குழியில் டயர் மற்றும் இரயில் சிலிப்பர் கட்டைகள் எரிக்கப்பட்ட அடையாளங்கள் இருப்பதனால் குறித்த பகுதியில் மீட்கப்பட்ட எலும்புத்துகள்கள் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டுமென பிரதேச மக்கள் பொலிசாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தமது வீடுகள் கடந்த 2014ம் ஆண்டு 7ம் மாதம் விடுவிக்கப்பட்டு இந்த வருடமே தங்களுக்கான வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக திருமதி வானதி உதயகுமார் (50) அவர்கள் தெரிவித்தார்.

26 வருடங்களுக்கு முன்னர் தாங்கள் அவ்விடத்தை விட்டுச்செல்லும் போது, தங்களது காணியில் மரம் அறுப்பதற்காக பெரிய குழியொன்று இருந்ததாகவும், அந்த குழி இருந்த இடத்தில் இருந்தே குறித்த எழும்புத்துண்டுகள் வெளிவந்துள்ளதாகவும், ஆனால் இந்த எழும்புத் துண்டுகள் யாருடையது எந்தக்காலத்திற்கு உரியது என்பதை பொலிசாரே விசாரணை செய்து கூற வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

1990ம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போன பலர் குறித்த இராணுவ முகாமிற்கே கொண்டு செல்லப்பட்டு காணாமல் போனதாகவும், இவை அவர்களது எலும்புக் கூடு துண்டுகளாக இருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.