sasassaவவுனியாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. அனுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த வாகனம் ஒன்றும் வவுனியாவிலிருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற கொள்கலன் ஒன்றும் இன்று அதிகாலை 5.30 அளவில் மோதி விபத்துக்குள்ளானதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

ஏ9 பிரதான வீதி, இரட்டை பெரியகுளம் பகுதிக்கு அருகே இடம்பெற்ற இந்த விபத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் தெஹிவளை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மதவாச்சி மற்றும் ஈரப் பெரியகுளம் பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் பாரவூர்தியின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை வவுனியா மூன்று முறிப்பு சந்திப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் படுகாயமடைந்த நிலையில் பொதுமக்களினால் மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. நோயாளர்களை வைத்தியசாலைக்கு ஏற்றி பயணித்த முச்சக்கர வண்டியும், உழவு இயந்திரம் ஒன்றும் நேருக்குநேர் மோதிக்கொண்டதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது, விபத்தில் சிக்கிய முச்சக்கரவண்டி வண்டியில் பயணித்தவர்களே படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தின்போது முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது. விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.