நாட்டின் அனைத்து உதவி மற்றும் பிரதித் தேர்தல் ஆணையாளர்கள் நாளை மறுதினம் (15), கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.ஏ.பி.சி. பெரேரா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் வேட்புமனுக்கள் தொடர்பான யோசனைத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, தேர்தல் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் ஆணையாளர்களுக்கு இடையில் எதிர்வரும் 16ஆம் திகதி கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இதேவேளை, பாராளுமன்றத் தேர்தலின் ஏற்பாடுகள் தொடர்பில் அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலகங்களிற்கும் அறிவிக்கும் சுற்றுநிருபமும் வெளியிடப்பட்டுள்ளது. வேட்புமனு மற்றும் தபால்மூலமான வாக்களிப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.ஏ.பி.சி. பெரேரா குறிப்பிட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் தொடர்பிலான முதலாவது வர்த்தமானி அறிவித்தல் கடந்த 10 ஆம் திகதி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.