இலங்கை எழுத்தாளர் (‘முல்லைமணி’) சுப்பிரமணியம்

mullaimaniமுல்லைமணி என்ற புனைபெயரில் எழுதி வந்த இலக்கியவாதியும், எழுத்தாளருமான சாகித்திய ரத்னா பரிசு பெற்ற எழுத்தாளர் சுப்பிரமணியம் (முல்லைமணி) 14.12.16 செவ்வாயன்று மாலை காலமானார்.

முல்லைமணி 1933ஆம் ஆண்டு முள்ளியவளையில் பிறந்தார். 1948ல் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பண்டித கலாசாலையில் கல்வி கற்றார். 1951ல் இவரது முதல் சிறுகதை வீரகேசரியில் வெளிவந்தது.1960களில் அவரது 27ஆவது வயதில் பண்டாரவன்னியன் என்னும் குறுநாடகத்தை பாடசாலை மாணவர்களுக்காக எழுதினார். பின்னர், நாடகம் விரிவுபடுத்தப்பட்டு 1964இல் கலைக்கழக பரிசில் பெற்றது. தமிழர்கள் வாழும் உலக நாடுகள் முழுவதிலும் பண்டாரவன்னியன் நாடகம் மேடையேற்றப்பட்டது. கலைஞர் கருணாநிதி அவர்கள் பண்டாரக வன்னியன் என்னும் நாவலை எழுதுவதற்கு இந்த நாடகம் கருப்பொருளாக அமைந்தது. வன்னிக்கு அடையாளம் தந்தவர் முல்லைமணி. முல்லைமணிக்கு அடையாளம் தந்தது பண்டார வன்னியன் என்று பலர் கருதுகின்றனர்.

1970களின் பின்னர், இவர் முழுமையான எழுத்தாளராக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். 1985இல் இவரது மல்லிகை வனம் நாவல் இந்தியாவில் சோமு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.

இவரது சிறுகதைகள் 1977ல் ‘அரசிகள் அழுவதில்லை’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு, சாகித்திய மண்டல பரிசு பெற்றது. 1998இல் ‘வன்னியர் திலகம்’, 2000ஆம் ஆண்டு ‘கமகம் சோலை’, 2001இல் ‘வன்னியர் சிந்தனை கட்டுரைகள்’, 2003ஆம் ஆண்டு ‘மழைக்கோலம்’ நாவல் போன்வற்றுடன், பிரதேசத்தின் பல ஆலயங்களுக்கு ஊஞ்சற் பதிகங்களையும் எழுதியுள்ளார்.

முல்லைமணி அவர்கள் 65 ஆண்டுகளுக்கு மேல் தமது எழுத்துலகப் பங்களிப்பை வழங்கியுள்ளார். இதன் காரணமாக 2016ஆம் ஆண்டு சாகித்திய ரத்னா என்ற அதியுயர் விருதை இலங்கை அரசு வழங்கி கௌரவித்தது