புத்தளம் – உடப்பு கீரியன்கள்ளி பகுதியில் பாழடைந்த காணியொன்றில் இருந்து எரியுண்ட நிலையில் வர்த்தகர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உடப்பு பகுதியைச் சேர்ந்த 34 வயதான பெரியவெள்ளையன் அருள்முருகன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் உடப்பு நகரில் உந்துருளி உதிரிபாகங்களை விற்பனை செய்து வந்தவரென தெரியவந்துள்ளது. இவர் நேற்றுமுன்தினம் முதல் காணாமல் போயிருந்ததாக உறவினர்களால் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இவரது சடலம் எரியுண்ட நிலையில் கீரியன்கல்லியில் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.

இதனிடையே சடலத்தின் அருகில் இருந்து மீட்கப்பட்ட பணப் பையில் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் கடன் தொல்லை காரணமாக தான் மன உளைச்சலில் இருந்ததாக எழுதப்பட்டிருந்தது. மேலும் அவரின் வீட்டில் இருந்தும் இதே போன்ற ஒரு கடிதத்தையும் காவல்துறை மீட்டுள்ளது.

இதன்படி கடனை திரும்ப செலுத்த முடியாத குறித்த நபர் தீ வைத்து தற்கொலை செய்த கொண்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.