சமாதானத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் சிவில் சமுக அமைப்புகள் அரசாங்கத்துக்கு எவ்வாறான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதற்கு, இலங்கை ஒரு சிறந்த உதாரணம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொதுசபைத் தலைவர் மிரஸ்லேவ் லஜ்கக் இதனைத் தெரிவித்துள்ளார். சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமாதானத்தை நிலைபெற செய்தல் தொடர்பான மாநாடு, ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் கடந்த வாரம் நடைபெற்றிருந்தது. இதன்போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மறுசீரமைப்புக்கான வரைவுகளை உருவாக்குவதில், சிவில் சமுக அமைப்புகள் சிறந்த பங்களிப்பை வழங்கி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் இலங்கையில் நடைபெறும் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில், இந்த மாநாட்டில் வைத்து ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரவதிவிடப் பிரதிநிதி ரொஹான் பெரேராவினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.