நீர்வேலியில் கோவிலில் வைத்து இருவர்மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வைத்து கடந்த 07ம் தகிதி இளைஞர்கள் இருவர்மீது வாள்வெட்டு நடத்தப்பட்டது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த 23வயதுடைய அப்புத்துரை கிரிசன் என்ற இளைஞனின் கழுத்தில் வெட்டுப்பட்டும் 23வயதுடைய கிரிகேசன் என்ற இளைஞனின் காலில் படுகாயமடைந்த நிலையிலும் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அவர்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிளை கோவில் கிணற்றுக்குள் வாள்வெட்டுக் கும்பல் தூக்கி வீசியுள்ளது. ஒருவரின் கைபேசியை கோவிலுக்கு முன்பாக உள்ள தேங்காய் உடைக்கும் கல்லில் போட்டு கும்பல் உடைத்துமிருந்தது. பொலிஸாரல் தேடப்பட்டுவரும் ஆவா குழுவின் முக்கியஸ்தர் வினோத் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலே இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இணுவிலைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் கோப்பாய் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்கள் மூவரையும் வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன், அன்றையதினம் அவர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் பணித்தார்.