இலங்கையில் இயற்கை எரிவாயு மற்றும் கனிய எண்ணெய் வளங்கள் தொடர்பான ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை அரசு சார்பாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளார். இந்நிகழ்வு பெற்றோலிய வளங்கள்அபிவிருத்தி செயலகத்தில் இடம்பெற்றது.இவ் ஒப்பந்தமானது உலகின் மிகப்பெரிய எரிபொருள் சேவை வழங்கும் நிறுவனமான ஸ்க்லம்பர் நிறுவனத்தின் உபநிறுவனமான ஈஸ்டன் எக்கோ டி.எப்.சீசீ நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வின் பின் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, ‘இந்த உடன்படிக்கையானது எதிர்காலத்தில் எமது நாட்டுக்கு அதிக நன்மையை ஏற்படுத்தி கொடுக்கும். இந்த திட்டத்தை மேற்கொள்ள நீண்டகாலம் தேவைப்பட்டது.

இன்று சாத்தியமானதால் எமக்கு இது மிகப்பெரிய வெற்றியாகும். இந்த ஒப்பந்தம் பத்து வருடங்களுக்கு உட்பட்டதாகும். பல பேச்சுவார்த்தைகளின் பின்பே ஒப்பந்தம் செய்ய தீர்மானித்தோம். இந்த ஒப்பந்தத்தின் மூலமாக நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்.

இந்நிறுவனம் ஆய்வுப் பணிகளுக்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட எதிர் பார்த்துள்ளனர். ஆய்வுப்பணிகள் மூலம் பெறப்படும் அனைத்து தரவுகளும் அரசுக்கே சொந்தமாகும். எமது அமைச்சும் அரசும் ஒவ்வொரு தகவல்களுக்கும் வருமானத்தை பெற்றுக்கொள்ளும் என்றார் அவர்.