sri lankan refugees in indiaதமிழகத்தின் விருதுநகர் அருகே உள்ள குல்லூர் சந்தை இலங்கை அகதிகள் முகாமில் கழிப்பறை, சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்துதர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதில் வசிப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் அருகே குல்லூர் சந்தை கிராமத்தில் உள்ள அகதிகள் முகாமில் 305 இலங்கை அகதிகள் குடும்பத்தனர் வசிக்கின்றனர். இதில் உள்ள பலர் விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் கூலி தொழிலாளர்களாக பணி புரிந்து வருகின்றனர்.இந்த முகாமில் அரசு சார்பில் கட்டி கொடுக்கப்பட்டுள்ள கழிப்பறை சேதமடைந்ததால் பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. மேலும், பெரிய வள்ளிக்குளத்திலிருந்து குல்லூர்சந்தை வரை செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளதால் பேருந்து, இரு சக்கர வாகனங்கள் ஊர்ந்தே செல்லும் நிலையுள்ளது.

அதேபோல், அகதிகள் முகாமில் உள்ள தெருக்களில் முறையான சாலை வசதி இல்லை. இதனால், மழை நேரங்களில் வீட்டின் முன் தண்ணீர் தேங்கி விடுகிறது. இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்ததால், சிறுவர்கள் விபத்தில் சிக்கி கொள்ளும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

மேலும், இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து விநியோகம் செய்யப்படும் குடிநீர் உவர்ப்பு தன்மை கொண்டதாக உள்ளது. இதனால், வாகனங்களில் விற்கப்படும் குடிநீரை 12 இந்திய ரூபாய்களுக்கு விலை கொடுத்து வாங்கு பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு தனியார் மூலம் இந்த முகாமில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க இயந்திரங்கள் மற்றும் தொட்டிகள் பொருத்தப்பட்டனவாம்.

ஆனால், மின்இணைப்பு கொடுக்காததால் அவை உபயோக மற்ற நிலையில் உள்ளன. இங்குள்ள நியாய விலை கடை முன்பு தேங்கிய தண்ணீரில் நின்றே பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்கி வருகின்றனர். இவ்வாறு சாலை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாததால், இங்கு வாழும் அகதிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு வசிக்கும் அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் என, இந்திய ஊடகமாக தின மலர் செய்தி வெளியிட்டுள்ளது.