arrest (17)நியூஸிலாந்துக்கு செல்லும் நோக்கில் புத்தளம் உடப்பு கடற்பகுதியில் தங்கியிருந்ததாக கூறப்படும் மூன்று இளைஞர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் உடப்பு பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது. இன்று அதிகாலை இவர்களைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உடப்பு கடற் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் எட்டுப் பேர் இருப்பதை அவதானித்த கடற்படையினர், அவர்களை கைதுசெய்ய முற்பட்ட போது, ஐவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட மூவரிடம் இருந்தும் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, படகு வரும் வரை தாம் அங்கு காத்திருந்ததாகவும், தம்மை ஏற்றிச் செல்பவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் எதும் தெரியாது எனவும் சந்தேகநபர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும், இந்த ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் யார் என இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.