கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களின் போது கர்ப்பிணி பெண் உட்பட 9பேர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தின்போது   ஒரு கர்ப்பிணி பெண் உட்பட ஆறு பெண்களும் மூன்று ஆண்களும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் தனியார் மற்றும் மூன்று நோயாளர் காவு வண்டிகளில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள் இரத்தத்தால் நனைந்து காணப்பட்டுள்ளது. பட்டா ரக வாகனம் மற்றும் உந்துருளியில் சென்ற 15 க்கு மேற்பட்டவர்கள் வாள்களுடன் வீடு புகுந்து வாள் வெட்டில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு ஒரு உந்துருளி எரிக்கப்பட்டுள்ளதோடு, மற்றொரு உந்துருளி அடித்து சேதமாக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் உள்ளது. ஒரு தற்காலிக வீடு எரிக்கப்பட்டுள்ளது.

மூன்று வீடுகளின் உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. மேலதி விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில். இராணுவத்தினர் சம்பவ இடத்தில் பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

வாள் வெட்டுக்குள்ளான குடும்பங்களில் ஒரு குடும்பம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் தங்களுக்கு குறித்த சிலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என முறைப்பாடு செய்துள்ளதாகவும் ஆனால் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என  பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.