sssதங்களுக்கான சம்பள உயர்வை உடன் வழங்குமாறு வலியுறுத்தி மலையகத்தின் பல பகுதிகளில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் இன்றும் ஒப்பாரியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஹட்டன் பிரதேச தொழிலாளர்கள் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் ஹட்டன் -நுவரெலியா பிரதான வீதி மற்றும் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் கொட்டகலை, பத்தனை ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 42 தோட்டங்களில் வசித்துவரும் ஐந்தாயிரம் தொழிலாளர்கள் கொட்டகலை நகரத்தில் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கொட்டகலை நகரத்தில் சில மணி நேரம் கடைகளையும் அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினர். அத்துடன் கினிகத்தேன கெனில்வத்த தோட்டமக்கள் நியாயமான சம்பளத்தினை வழங்குமாறு கோரி கோஷங்களை எழுப்பியவாறு கினிகத்தேன நகரத்திற்கு பேரணியாக சென்று எதிர்ப்பை வெளியிட்டனர். 1000ரூபா சம்பள உயர்வை வழங்குமாறும், ஏமாற்று கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்யும்படியும் தெரிவிக்கும் வகையில் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய தோட்டத் தொழிலாளர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். ஹட்டன் – கொழும்பு புகையிரத பாதையின் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தண்டவாளத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தரித்திருந்ததால் சில மணி நேரம் ரயில் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.