கடற்படையின் கவச வாகனம் மோதி பாடசாலை மாணவி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். யாழ். புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இன்று காலை 8.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த திருலங்கன் கேசனா (வயது 9) என்ற மாணவி தனது மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோதே கடற்படையின் வாகனம் மோதி விபத்துள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மாணவி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.மாமன் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள கடற்படை முகாமிற்கு உணவு பொருட்களை விநியோகம் செய்ய பயன்படுத்தப்படும் கவச வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.