மீண்டும் இலங்கைவரவுள்ளர் இந்தியப் பிரதமர் திரு. மோடி

Modi 2இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அடுத்த வருடம் மே மாதமளவில் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை வரும் அவர், இந்திய உதவியில் ஹட்டன் நகரில் நிர்மாணிக்கப்படும், வைத்தியசாலையொன்றை திறந்து வைக்கவுள்ளதோடு, கொழும்பில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றிலும், கலந்து கொள்வார் என ராஜித்த சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய ஊடகமான தி ஹிந்துவுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 2015ம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

இலங்கை வந்த பாரத முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மீதான தாக்குதலை அடுத்து, சுமார் 28 ஆண்டுகள் அந்த நாட்டின் பிரதமர்கள் எவரும் இலங்கைக்கு விஜயம் செய்யாத நிலையில், மோடியின் அந்த வருகை அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தமை விஷேட அம்சமாகும்.

பொலிஸ்மா அதிபரின் பெயரில் பேஸ்புக் மூலம் பெண்ணை ஏமாற்றியவர் கைது
 
facebookபொலிஸ்மா அதிபரின் பெயரில் போலி பேஸ்புக் கணக்கொன்றை ஆரம்பித்து, பெண்ணொருவரை ஏமாற்றிய நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கண்டியைச் சேர்ந்த பெண் ஒருவரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகநபர் நியூஸிலாந்தில் வசிப்பவர் எனவும், இலங்கை வந்தவேளையே இவரைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து நேற்றையதினம் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய முன்னிலையில் இவரை ஆஜர்படுத்தியவேளை நாளை வரை (08) விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்க, இணையத்தைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து தினம் தினம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வருவதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான குற்றம் இழைப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த விஷேட பயிற்சி அளிக்கப்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவீகரிக்கப்பட்ட காணிகள் குறித்து வவுனியா விவசாயிகள் எச்சரிக்கை

vavunyaவவுனியா நகர குடிநீர் திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட விவசாய காணிகளுக்கு பதிலாக உடனடியாக மாற்றுக்காணிகள் வழங்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதன்கிழமையன்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து வவுனியா மன்னார் வீதியில் பேரணியாக அரச செயலகத்திற்குச் சென்று, வவுனியா அரசாங்க அதிபரிடம் இது தொடர்பில் மனுவொன்றைக் கையளித்திருக்கின்றனர்.வவுனியா நகருக்கு அப்பால் பேராறு என்ற ஆற்றை மறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இந்த குடிநீர்த்திட்டம் நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையினரால் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் விவசாயிகளுக்குச் சொந்தமான 167 ஏக்கர் விளைநிலங்கள் சுவீகரிக்கப்பட்டிருந்தன.

இந்தக் காணிகளுக்குப் பதிலாக அதே அளவு காணிகள் வழங்கப்படும் எனவும், அதற்காக ஒதுக்கப்பட்ட காட்டுப்பகுதியை வீதி வசதிகளுடன் கூடிய விளைநிலங்களாக செப்பனிடப்பட்டு தரப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.
 
இதற்கு ஆதாரமாக கமக்கார் அமைப்புக்களின் பிரதிநிதிகள், வவுனியா பிரதேச செயலாளர், நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையினர் என முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்றும் செய்து கொள்ளப்பட்டது. இதில் ஒப்புக்கொள்ளப்பட்டவாறு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் காணிகள் இன்னும் வழங்கப்படவில்லை. மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. இந்தக் காணிகளுக்காக வழங்கப்பட்ட தற்காலிக காணி அனுமதிப்பத்திரத்தின் பெறுமதியும் கடந்த வருடத்துடன் முடிந்துவிட்டது.

எனவே, உடனடியாக ஒப்புக்கொள்ளப்பட்டவாறு விளைநிலக் காணிகள் வழங்கப்பட வேண்டும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது மனுவில் எச்சரிக்கை செய்திருக்கின்றனர். மனுவைப் பெற்றுக்கொண்ட வவுனியா அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார, உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருக்கின்றார்.