யாழ். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் நிறுவுநர் நாளும் பரிசளிப்பு விழாவும் நேற்று (22.09.2016) வியாழக்கிழமை காலை 9.00மணியளவில் கல்லுரியின் பிரதான மண்டபத்தில் கல்லுரியின் அதிபர் திரு. கு.ரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டதோடு, சிறப்பு விருந்தினர்களாக அருணாசலம் அகிலதாஸ் (பிரதிக் கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாண கல்வி வலயம்), திருமதி பாலசவுந்தரி சிவகுமார் (லண்டன் பழைய மாணவர் சங்க உறுப்பினர்), ஆறுமுகம் இராசநாயகம் (ஓய்வுபெற்ற இலங்கை வங்கியாளர், பழைய மாணவர்), தம்பு நமசிவாயம் பஞ்சாட்சரம் (ஓய்வுநிலைய ஆங்கில ஆசான், பழைய மாணவர்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். நிறுவுநர் நினைவுப் பேருரையினை தம்பு நமசிவாயம் பஞ்சாட்சரம் அவர்கள் நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து அத்தியார் நினைவுமலர் வெளியிடப்பட்டது. முதலியார் அத்தியார் அருணாசலம் அவர்களே அத்தியார் இந்து பாடசாலையை ஆரம்பித்து வைத்தவர். அவர் பற்றி எழுதப்பட்ட நூலினை லண்டனில் இருந்து வருகைதந்திருந்த மாணிக்கவாசகர் திருவாசகம் அவர்கள் வெளியிட்டு வைக்க முதற்பிரதியை தம்பு நமசிவாயம் பஞ்சாட்சரம் அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பிள்ளைகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்று பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.