anurathapuram-jailஅநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் போகம்பரை சிறைச்சாலைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளார்.

கண்டி நீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணை நடைபெறவுள்ளதாலேயே அவர் போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் ஏனைய 16 தமிழ் அரசியல் கைதிகளும் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 17 பேரும் கடந்த 21ஆம் திகதிமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தமது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் வலியுறுத்தி கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது வழக்குகளை தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் எனவும் அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரியுள்ளனர்.  இதேவேளை உண்ணாவிரதமிருக்கும் அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகள் நல்ல நிலையிலேயே இருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.