கேப்பாப்புலவு பூர்வீக கிராமத்தில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது சொந்த நிலத்தை மீட்கும் போராட்டத்தை இன்று ஆறாவது நாளாகவும் பொதுமக்கள் முன்னெடுத்துள்ளனர். 128 குடும்பங்களுக்கு சொந்தமான 484 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியே பொதுமக்கள், தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தை தொடர்ந்து, பொதுமக்கள் சொந்த நிலங்களில் இருந்து வெளியேறிய நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பிரதேசங்கள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டன. கடந்த முதலாம் திகதி, புலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் நிறைவுக்கு வந்ததை அடுத்து கேப்பாப்புலவு மக்கள் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இந்நிலையில், கேப்பாப்புலவு மக்களை இராணுவத்தினர் அச்சுறுத்தும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். “எத்தகைய அச்சுறுத்தலை இராணுவத்தினர் விடுத்தாலும் தாம் போராட்டத்தை நிறுத்திவிடப் போவதில்லை என்றும் போராட்ட இடத்திலே மடிந்தாலும் சொந்தநிலம் திரும்பாது தமது மண்மீட்பு போராட்டம் தொடரும்.” என்றும், கேப்பாப்புலவு மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்றையதினம் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு நேரில் சென்றிருந்த வடமாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் அவர்கள், அந்த மக்களோடு கலந்துரையாடி அவர்களது போராட்டத்துக்கு தங்களது பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்.