hivவடமாகாணத்தில் இந்த ஆண்டில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 6 பேர் இணங்காணப்பட்டுள்ளனர். அதில் மூன்று பேர் அண்மையில் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பாலியல் தொற்றுநோய் தடுப்பு சிகிச்சைப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி தாரணி குருபரன் தெரிவித்துள்ளார்.

1987ம் ஆண்டில் இருந்து அண்ணளவாக 80 பேருக்கு எயிட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 45 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட எச்.ஐ.வி சிகிச்சை பிரிவில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகிய 39 பேர் வரையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அதில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய 30 பேரும் தற்போது, யாழ் மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இந்த ஆண்டில் வடமாகாணத்தில் 6 பேர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் என பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஒருவரும், மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒருவரும், யாழ். மாவட்டத்தில் இருந்து நான்கு பேரும், இணங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 63வயதுடைய ஒருவரும், இருவர் 50 வயது முதல் 60 வயது வரையானவர்களும், மூன்று பேர் 30 வயது முதல் 40 வயதுடையவர்கள் என்றும் இணங்காணப்பட்டுள்ளனர். அதில், 3 பெண்களும், 3 ஆண்களும் உள்ளடங்குகின்றார்கள். எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களில் மன்னார் மாவட்த்தைச் சேர்ந்த ஒரு நபரும், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 2 நபர்களும் அண்மையில் உயிரிழந்துள்ளார்கள்.

எனவே, தொற்றுக்கள் பல வகையிலும் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதனால், நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளவும், எமது எதிர்கால சந்ததியை பாதுகாக்கவும் இன்றே பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென்பது மிக மிக அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.