jaffnaவட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் சுகாதார ஊழியர் தொழிற்சங்க பிரதிநிதிகள், மாநகர ஆணையாளர் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.

இதன்படி, இன்று (புதன் கிழமை) முதல் தாம் பணிக்கு திரும்புவதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ். மாநகர சபையின் தற்காலிக சுகாதார தொழிலாளர்களாக கடமையாற்றுகின்ற 120 சுகாதார தொழிலாளர்களும் ஏனைய 70 தொழிலாளர்களுக்கும் படிப்படியாக நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு வாக்குறுதி அளிக்கப்பட்டதையடுத்து ஊழியர்கள் இந்த பணி புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.

முதல் 3 மாத காலத்திற்குள் 90 பேருக்கும் அடுத்த 6 மாத காலத்திற்குள் ஏனையவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு உள்ளுராட்சி உதவி ஆணையாளரும் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட வட மாகாண சபை உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடந்த 9 நாட்களாக பணி புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் குடும்பங்களின் நிலமையை கவனத்தில் கொண்டு கடந்த 9 நாட்களுக்கான சம்பள நிலுவை வழங்கப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு கருத்துத் தெரிவித்த உள்ளுராட்சி உதவி அணையாளர் மற்றும் மாநகரசபை ஆணையாளர் சம்பளம் வழங்குவதாயின் பல அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், உடனடியாக அதற்குரிய உத்தரவாதத்தை தரமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து கடந்த 9 நாட்களாக மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவதற்கு மேலதிக நேர அடிப்படையில் சம்பளம் வழங்குகின்ற ஆலோசனையை மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்ததையடுத்து அதற்குரிய இணக்கத்தை உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் மாநகர சபை ஆணையாளர் வெளியிட்டனர்.

மேலும் ஊழியர்களுக்குரிய நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பாக மாதம் ஒரு முறை வடக்கு முதலமைச்சர், உள்ளுராட்சி அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் இணைந்து சந்தித்து பேசுவது எனவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.