vigneswaranதமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்தெறிய வேண்டிய அவசியம் எனக்கில்லை என வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது வடக்கு முதல்வர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஒரு பத்திரிகையில் வெளிவருகின்ற செய்திகள் உண்மைத் தன்மையை கொண்டிருத்தல் வேண்டும். அதே சந்தர்ப்பத்தில் அச் செய்திகள் பொதுமக்கள் குழப்பமடையாத வகையிலும் இனங்களுக்கிடையே சந்தேகங்களையும் காழ்ப்புணர்வுகளையும் தூண்டாத வகையிலும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் எதிர்கால சுபீட்சத்திற்கும் ஏற்றவையாகவும் அமைதல் சிறப்பானது.

குறிப்பாக இளைஞர், யுவதிகள் விடயத்தில் இன்னும் கூடுதலான கவனங்கள் செலுத்தப்பட்டு செய்திகள் பிரசுரிக்கப்பட வேண்டும். இளைஞர் யுவதிகளின் தவறான சில நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அச் செய்திகளை முகப்பக்கத்தில் பிரசுரம் செய்வதன் மூலம் எதுவுமறியா அப்பாவி சிறுவர்களும் அச் செய்திகளை வாசித்து அதன் தூண்டல் விளைபேற்றினால் தாமும் தவறுகளை இழைக்க முற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

சரியான விடயங்களைச் “சரி” என ஆமோதிப்பதற்கும் அதே நேரம் சமூகத்திற்கு ஒவ்வாத தவறான விடயங்களை “தவறு” என்று எடுத்துக் காட்டுவதற்கும் பத்திரிகைகள் பின்நிற்கக்கூடாது.

அண்ணன் சம்பந்தன் அவர்கள் இங்கிருப்பதால் ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடுதல் நன்மை பயக்கும் என்று எண்ணுகின்றேன். என்னால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை சீர்குலைந்து போகக்கூடும் என்ற கருத்து பத்திரிகைகளால் மேலும் மேலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இது சிலரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் அல்லது தனிப்பட்டவர்களின் அரசியலின் பிரதிபலிப்பாக இருக்கலாம். என்னைப் பொறுத்த வரையில் நான் எந்த மனோநிலையுடன் அண்ணன் சம்பந்தன் அவர்களின் கோரிக்கையை ஏற்று அரசியலுக்குள் இறங்கினேனோ அதே மனோநிலையில் தான் இப்பொழுதும் இருக்கின்றேன். எனக்குப் பதவிகள், அதிகாரங்கள் பெரிதன்று. அவற்றை அடைய வேண்டும் என்ற அவாவும் எனக்கில்லை.

பல்லாயிரம் மக்களின் எதிர்பார்பொன்றே என்னைத் தொடர்ந்து இந்தப் பதவியில் வைத்துக் கொண்டிருக்கின்றது. ஆகவே கூட்டமைப்பை உடைத்தெறிய வேண்டிய அவசியம் எனக்கில்லை. என் கருத்துக்களில் வலு இருக்கின்றதா என்பதைக் கூட்டமைப்பினர் பரிசீலித்துப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கிருக்கின்றது என்பது உண்மைதான்.

ஆனால் அது கொள்கை ரீதியானது. ஒரு அமைப்பின் கொள்கைகள் மாறலாம். அதனால் அந்த அமைப்பை அடித்துடைக்கவே அவ்வாறான மாற்றுக் கொள்கை வெளியிடப்படுகின்றது என்று எண்ணுவது மடமை. அது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான கருத்து. ஆகவே முரண்பாடுகள் இருப்பதால்த்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு உயிரோட்டம் நிறைந்த ஜனநாயக கூட்டமைப்பாக இருந்து வருகின்றது என்பதே எனது கருத்து.

சில சமயங்களில் எமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் எதைக் கூறியிருந்தாலும் அவற்றை மாற்றிப் பேரம் பேசத் தலைவர்களுக்கு உரித்துண்டு என்ற கருத்து வெளியிடப்படுவதுண்டு. தலைவர்கள் கொள்கைகளில் இருந்து மாறுபடுவதாக இருந்தால் அம் மாற்றுக் கருத்துக்களை மக்கள் ஏற்க வேண்டும் என்பதே எனது கருத்து.

அவ்வாறில்லை என்றால் பெண், பொன், காணி, பதவி, அதிகாரம் என்பவற்றால் எமது தலைவர்களை மற்றவர்கள் விலைக்கு வாங்கிவிட முடியும். எந்தளவுக்கு எமது பேரம் சார்ந்த மாற்றங்கள் செல்லலாம் என்ற கேள்வி எழும் போது சுயநலத்திற்கு ஏற்றவாறு தலைவர்கள் நடந்து கொள்ள இடமிருக்கின்றது என்பதை இங்கு கூறி வைக்கின்றேன்.

இறுதியாக ஒரு வேண்டுகோள். பத்திரிகைகள் தமது சொந்த கருத்துக்கள், தமது சுய இலாபங்கள், சுய அரசியல் முன்னெடுப்புக்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து எம்மைத் திட்டுவதை மட்டும் முதன்மைப்படுத்தாது பொது நோக்கம் கொண்ட, மக்கள் நலம் சார்ந்த எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பாக, சமூக மேம்பாடுகள் தொடர்பாக எழுத முன்வர வேண்டும்.