teachersதொடர்ச்சியாக 10 வருடங்களுக்கு அதிகமாக கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் இடமாற்ற கொள்கையை பிரகடனப்படுத்துமாறு கல்வி அமைச்சர் அகில விராச் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதற்கமையவே தேசிய பாடசாலைகளில் தொடர்ந்து 10 வருடங்களுக்கு அதிகமாக தேசிய பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வரும் ஆசியரியர்கள் 12000 பேர் காணப்படுவதாகவும் அவர்களில் 3ஆயிரம் பேருக்கு நாளைய தினம் இடமாற்றங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறித்த இடமாற்றங்கள் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சு, கல்வி பொது தராதர பத்திர உயர்தர மாணவர்களுக்கு கற்பிக்கும் மாணவர்களுக்கான ஆசிரியர்களுக்கு முதல் கட்டமாக இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்குரிய இடமாற்றத்திற்கான அறிவித்தல் கடிதம் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 1ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடமாற்றத்திற்கான அறிவித்தல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே பாடசாலையில் தொடர்ந்து கற்பிப்பதனால் மாணவர்களுக்கு ஏற்படும் விரக்தி தன்மையை போக்கவும், புதிய ஆசிரியர்களின் வருகையினால் மாணவர்களுக்கு ஏற்படும் உற்சாகத்தினை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அத்துடன் ஆசிரியர்களின் இடமாற்றத்தின்போது அருகில் தேசிய பாடசாலை ஒன்று இல்லையாயின் கலந்துரையாடல்களின் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் எனவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.